Wednesday, February 11, 2009

துண்டு கவிதைகள்...

மீன்கொத்தியின் அலகினின்று
நழுவி விட்ட மீனொன்று
வெளியில் நீந்தி
விழுந்து கொண்டிருந்தது,
இரவில்
எறும்புகளாய் உருமாறும்
எழுத்துக்கள் என்னை
இழுத்து சென்று போடும்
அதே குளத்தில்....

*************************

மேய்ப்பரற்ற நகரத்தில்
தனித்து விட்ட ஆடு
வழி விசாரித்தது
அய்யனார் கோவிலுக்கு...

போஸ்டர் மேயும் காளை
போட்டியாளர் கழுதையை
கண்காட்டியது...

கழுதை காட்டிய திசையில்
ஓடிக்கொண்டிருந்தார் அய்யனார்
அரிவாள் சுத்தியல்
என ஆயுதங்கள் துரத்த...

*****************************

என் கட்டிலின் அடியில்
படுத்து கிடக்குமந்த சாதுவான
கறுப்பு பூனை
நடுச்சாமங்களில்
ஒளிரும் அதன் கண்கள்
உலுக்கியெழுப்பும் தருணங்களில்
விளக்கு பொருத்துவேன் பதறி
ஒய்யாரமாய் மதிலேறுமது
இரவை சுவைத்தபடி...

Thursday, February 5, 2009

மழையோடை கப்பல்களில்...

மழையோடை கப்பல்களில்
வந்திறங்கும் கனவுகளை

அஞ்சறைப் பெட்டி
துழாவலில்
அகப்படும் சில்லறைகளை

செலவு செய்ய
முடிவதில்லை-ஏனோ
கடைத்தெருவில்
கல்கோனாவும் கிடைப்பதில்லை...

ஆழக்கிணறுள்
அமிழும் குடமிது
ஏறும் வேளை
எடை குறைகிறது...

நீர் அருந்தும் பொழுது
நெல்லி பழுக்கிறது...

Friday, January 30, 2009

வில்லுப்பாட்டு...

சில நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் நண்பனொருவன் திடீரென "வில்லு" இருக்கா என்றான்.நான் திருதிருவென விழித்து "அதெல்லாம் இல்லீங்க" என்றேன்.அவன் மேலும் விளக்கும் விதமாக "வில்லு-பாட்டுங்க"என்றான்.அப்பொழுதும் நம்ம டியூப் லைட் முனுக் முனுக் என மின்னி அணைந்துவிட்டதால் மறுபடியும் "இல்லீங்க, santhoor இருக்கு,"Music of the mountain" ஷிவ் குமார் ஷர்மா..என்றேன்.அவன் என்னைப்போலவே திருதிருவென விழித்துவிட்டு போய்விட்டான்.

யோசித்தால் ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது.கல்லூரி நாட்களில் வாரம் தவறாமல் குமுதம்,ஆனந்தவிகடன் வாங்கியவனா நான்.அப்பொழுது சினிமா இயக்குனர் கனவில்(நல்ல வேளை தமிழ் சினிமா பிழைத்தது என நீங்கள் முனகுவது கேட்கிறது) வேறு இருந்ததால்,சினிமா குறித்த செய்திகள் விரல் நுனியில் இருக்கும்.புதிய படப்பாடல்களை உடனுக்குடன் வாங்கி விடுவேன்.
இவையெல்லாம் தியானேஷ் எனும் நண்பர் சிற்றிதழ்களை அறிமுகம் செய்யும் வரைதான்.கல்லூரி இதழில் வெளியான என் கவிதையை படித்து தேடி வந்து நட்பு பாராட்டிய சக கல்லூரி மாணவர்.உயிர்மை முதல் பிரதியை வாசிக்கத்தந்து எப்படி இருக்கிறது எனக் கேட்டார்.நான் "தமிழில் தான் இருக்கு,ஆனா ஓரெழவும் புரியலீங்க"என்றேன்.ரமேஷ்-பிரேம்,சாரு நிவேதிதா வெல்லாம் படித்து வெலவெலத்து கிடந்தவனைப் பார்த்து பரிதாபப்பட்டு "எட்டுத்திக்கும் மதயானை,ஜே.ஜே.சில குறிப்புகள் போன்றவற்றை தந்து நமக்கு எலக்கிய அறிவு புகட்டுவதில் பெரிய சிரத்தை எடுத்துக்கொண்டார்.

என் நண்பர் அப்பொழுதே பக்குவப்பட்டவராக இருந்திருக்கிறார் என இப்பொழுது புரிகிறது.ஏனெனில் அவருக்கு சாரு,ஜெமோ,சுரா மூவரையும் ஒருங்கே பிடித்திருந்தது.கடைசியாக தொலை பேசிய போது கொற்றவை எப்படி என்றேன்.வாசிக்கலே என்றார்.நான் ஆச்சர்யமாக ஏன் என்றேன்.இவ்வளவு நாள் வெளியே தான் பேசினார்,இப்போல்லாம் உள்ளேயும் பேச ஆரம்பிச்சுட்டார் என்றார்.இந்த மாதிரி விஷயத்தில் நம்ம டியூப் லைட் பக்கென்று பிடித்து கொள்வதால் பிறகெதுவும் கேட்கவில்லை.

வில்லுவை மறந்து விட்டோம்.சினிமா பாடல்கள் தவிர்த்து இளையராஜாவின் "How to name it,Nothing but wind,மற்றும் Back street boys போன்ற ஆல்பங்களையே கேட்டிருந்த எனக்கு 2004 ஆம் ஆண்டு திருச்சியில்(இங்கே தான் பொறியியல் படித்தேன்) நிகழ்ந்த சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் சத்சங்கம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.அதற்கு முன் ஓஷோவை தவிர்த்து வேறு எந்த ஆன்மீக ஆளுமைகளுடனும் பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை.

ஒஷோவை வாசிக்க நேர்ந்ததே ஆச்சர்யம் தான்.ஏதோ புத்தகம் வாங்க சென்று,அட்டைப்படத்திலிருந்த ஒஷோவைப் பார்த்து வசீகரமாய் இருக்கிறாரே என (பள்ளி இறுதி அல்லது கல்லூரி முதல் ஆண்டு) வாங்கிய முதல் புத்தகம் "வெற்றுப்படகு".அதற்கு முன் ஒஷோவையும் தெரியாது.
விடுதி நண்பரொருவர் அழைக்கவே ஜகியின் அந்த சத்சங்கத்திற்கு சென்றோம்.வழியெல்லாம் சாரை சாரையாக மக்கள் கூட்டம் வேறு.ஏதோ திருவிழா என நினைத்தபடி சென்ற எனக்கு ஆச்சர்யம்.எல்லோரும் வந்தது அந்த சத்சங்கத்திற்குத்தான்.ஜகி முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்."எத்தனை பேருக்கு ஆங்கிலத்தில் பேசுவது பரவாயில்லை" என்ற கேள்விக்கு பெரும்பாலோனர் அமைதி காக்கவே சிரித்தபடி தமிழில் பேசத்தொடங்கினார்.

சத்சங்கம் முடிவுறும் சமயத்தில் சிறிது நேரம் கூட்டு தியானம் என்றார்.கண் மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தோம்.சில நிமிடங்களுக்கெல்லாம் அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் ஒரு சிறிய சலனம் கூட அற்று அமைதியான ஒரு சூழல் உருவாகியிருந்தது.திடுமென ஒலிக்கத்தொடங்கின மேடையிலிருந்த பெரிய பெரிய தோல் வாத்தியக் கருவிகள்.இசை வெள்ளம் என்ற சொற்றொடருக்கெல்லாம் அர்த்தம் அறிந்தது அன்று தான்.(தியான அனுபவங்களை வெளியே பீற்றிக் கொள்ளக்கூடாது என ஒரு விதி இருக்கிறது,எனினும் ஒன்றே ஒன்று) அந்த இசையின் அதிர்வுகளும்,தியான நிலையும் சேர்ந்து நான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து சட்டென மேலெழும்பி பறப்பதாக நிச்சயமாக உணர்ந்தேன்.(உடலின் பறக்கும் நிலை,அதன் கூறுகள்,Spiritual body,Cosmic body என விலாவாரியாக ஒஷோவின் ஒரு ஆன்மிக ரகசியம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.)

அந்த சத்சங்கம் முடிந்து வெளியே வந்த பொழுது நான் என் விடுதி நண்பரை பிராண்டி, "சார்,உங்களுக்கு தியானம் பண்ணும் போது பறக்குற மாதிரி ஏதாவது..." என இழுத்தேன்.அவர் என்னை ஒரு மாதிரியாக பார்க்கவே அத்துடன் விட்டு விட்டேன்.

பிறகு வேலை நிமித்தம் விழுப்புரத்தில் ஒரு நான்கு மாதம் தங்க நேர்ந்த சமயத்தில் ஏதேச்சையாக அங்கு நிகழ்ந்த ISHA யோக வகுப்பில் கலந்து கொண்டேன்.அதன் பிறகு எல்லாம் மாறிவிட்டது.வாசிப்பது,எழுதுவது என யாவும் பெரிய பிடிப்பொன்றும் அற்று நின்று போனது.2007 மற்றும் 2008 மிகவும் சோதனையான ஆண்டாக இருந்தது.மஹாராஷ்டிரா,ஒரிஸா என மூன்று வருடங்கள் சுற்றி பிறகு பிடிக்காமல் வேலையை விட்டு விட்டு ஆறுமாதங்கள் வீட்டிலிருந்தேன்.பொழுது போகாமல் இணையத்தில் மேய்ந்த பொழுது blog சமாச்சாரங்கள் கண்ணில் பட்டது.ஒஷோ என கூகிளியதில் கண்ணில் பட்டது அய்யனாரின் வலைதளம்.இவ்வாறாக ஓஷோ நம்மை தொடர்ந்து புதிய அனுபவங்களுக்கு எடுத்துச்செல்கிறார்.2008 மார்ச்சில் சென்னையில் வேலையில் மீண்டும் சேர்ந்து ஒரு வருடம் ஆகப் போகிறது.

2009 ல் புதிதாக யாவற்றையும் தொடங்குவோம் என செய்த முதல் காரியம் புத்தக சந்தை சென்றதுதான்.இடையில் நிறைய உலக படங்கள் பார்த்திருக்கிறேன்.கைவசம் நிறைய புத்தகங்களும்,எக்கச்சக்கமாக படங்களும் இருக்கின்றன.யார் என்ன எனத் தெரியாமலேயே உரிமையோடு நட்பு பாராட்டும் அனுஜன்யா,கார்த்திக்,உமா,தமிழன் இன்னும் புதிய நண்பர்கள் இவர்கள் எல்லோரையும் சந்திக்கும் பாலமாக அய்யனார் என அலாதியாக இருக்கிறது இந்த அனுபவம்.நன்றி அய்யனார்...

கடைசி வரை வில்லுவைப் பற்றி பேசாமல் விட்டாயிற்று.தொலைக்காட்சியோ,பேரூந்து பயணங்களோ இல்லாத office to room,Room to office என்ற சென்னை வாழ்வில் எங்கே சென்று "வில்லு" பாட்டெல்லாம் கேட்க.கையிருப்பெல்லாம் தனியறையும்,மடிகணிணியும்,இணையமும் தான்.சாருவின் கலகம்,காதல்,இசை படித்து, இணையத்தில் Nancy Ajram பாடல்களை தரவிறக்கினேன்.அதையும் இன்னும் கேட்க கூடவில்லை.ஏன் இதையெல்லாம் எழுதுகிறேன் எனத் தெரியவில்லை.குறைந்தது என்னையாவது திரும்ப பார்த்துக் கொள்ள முடிகிறது.
**முதல் மொக்கை என்பதால் ஆட்டோவெல்லாம் அனுப்ப மாட்டீர்கள் என நம்புகிறேன் : )

Friday, January 16, 2009

எனினும் புலரும் பொழுது....

நிறை பரிதியுலா நிசியில்
இரை தேடுமோர் சர்பம்
சருகிடை நெளிந்தூர்கிறது...

பராபரக் காதலனின்
தியான நிஷ்டையில்
ஆடிக்களைத்த ரம்பா
ஆடை மாற்றிக்கொண்டிருந்தாள்...

கன்னியில் சிக்குண்ட
நாரை ரெண்டை
வளைக்குள்ளிருந்து
வேவு பார்க்கிறது
வயல் நண்டு...

இறுகப் புணரும்
கிணற்றுத்தவளைகளை
குறும்பாய் எட்டிப்பார்த்தவள்
களுக்கென அவை ஆழம் புகவே
அலையலையாய் சிரிக்கிறாள்...

ஏதோ அவசரமாய் சொல்ல
அரைவேக்காட்டில் எழுந்தவனை
மடாரென விறகால் அடித்து
மீண்டும் தூங்க வைத்தான்
மயானச் சித்தன்...

யாவும் கண்டு
மெல்ல உறங்குது இரவு
எப்பொழுதும் போலவே
இயல்பாய் புலர்கிறது பொழுது...

Sunday, January 11, 2009

Slumdog Millionaire....



ஒரு திரைப்படம் எத்தனை ரசவாதங்களை தன்னுள்ளே கொண்டிருக்கிறது...வெகு நாட்களுக்கு பிறகு ஒரு அற்புதமான படம் பார்த்திருக்கிறேன்.

Slumdog Millionaire.

20 மில்லியன் வெல்ல இன்னும் ஒரே ஒரு கேள்வியோடு காத்திருக்கிறான் ஜமால்.இதுவரை 10 மில்லியனுக்கான கேள்விகளின் சரியான விடைகளை கூறியிருக்கிறான்.மும்பையின் சேரியொன்றில் வசித்த,இளம் வயதிலேயே கலவரத்தில் கண்ணெதிரே தன் தாயை பறி கொடுத்த,தன் வாழ்வின் தருணங்களையெல்லாம் சபிக்கப்பட்டது போல் கடந்திருக்கும் ஒரு சாதாரணன் இதுவரை 10 மில்லியனுக்கான கேள்விகளின் விடைகளை அளித்திருக்கிறான்.எப்படி?

1.அவன் ஏமாற்றினான்

2.அவன் அதிர்ஷ்டக்காரன்

3.அவன் ஒரு அறிவுஜீவி

4.இது 'விதி'க்கப்பட்டது.

இன்னும் ஒரே ஒரு கேள்வி மீதமுள்ள நிலையில்,நிகழ்ச்சி நடத்தும் அனில்கபூரின் சந்தேகம் மற்றும் தன்முனைப்பால் கதாநாயகன் ஜமால் காவல்துறையினரால் ரகசியமாக விசாரிக்கப்படுவதோடு படம் தொடங்குகிறது.

ஜமாலிடம் காவல்துறையினர் கேட்பதெல்லாம் ஒரு தேனீர் விநியோகிக்கும் நபர் 10 மில்லியனுக்கான கேள்விகளின் விடையை எப்படி கூற முடியும்.?அமிதாப் நடத்திய "கோன் பனேகா க்ரோர்பதி" நிகழ்ச்சியை புனைந்து விகாஸ் ஸ்வரப் எழுதிய கேள்வி-பதில்(Q & A) நாவல் திரைக்கதையாக்கப்பட்டிருக்கிறது.

விசாரனையில் விரியும் ஜமாலின் நினைவுகளினூடாக மும்பையின் சேரி வாழ்வு விரிகிறது.இடையிடையே ஜமால் இதுவரை பதில் கூறியிருக்கும் க்ரோர்பதி நிகழ்ச்சி.திரைக்கதையாகட்டும்,மும்பை சேரியினூடாக அலைந்து விரியும் anthony dod mantley யின் ஒளிப்பதிவாகட்டும்,A.R.ரகுமானின் இசையாகட்டும்,முகத்திலறையும் காட்சியமைப்புகளாகட்டும் படக்குழுவினரின் உழைப்பு தெரிகிறது.

இளம் பிராயத்து குற்றங்களுக்கும்,தண்டனைகளுக்கும்,வெற்றிகளுக்கும்,தோல்விகளுக்கும் பின்னே ஒளிந்திருக்கும் குரூரங்களையும்,அழகியலையும்,கண்ணீரையும் ஒருங்கே வெளிப்படுத்த முயலும் இப்படம் ஒரு கலைப்படைப்பாகியிருக்கிறது.பல காட்சிகளில் சமநிலை இழக்க நேரிடுகிறது.இதற்கு முன் பார்க்கும் பொழுதே பாடாய் படுத்திய இன்னொரு படம்"Life is Beautifull".

Sludog Millionaire இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது.ஆதலால் மேற்கொண்டு கதையை கூறி நியாயமாக உங்களுக்கு கிடைக்க வேண்டிய காண் இன்பத்தை நான் கெடுக்க விரும்பவில்லை.

நிகழ்ச்சி நடத்துனராக அனில் கபூர் அசத்தியிருக்கிறார்.பெரும்பாலும் புதிய முகங்கள் நிறைய தென்படுகின்றன.எனினும் அனைவரிடமிருந்தும் தேர்ந்த நடிப்பை வெளிக்கொணர்ந்திருக்கிறார் இயக்குனர் Danny Boyle. படத்தின் நிறைகளில் இசையை குறிப்பிட்டாக வேண்டும்.ரகுமானின் பின்னணியிசையில் முதன் முறையாக கனமான மௌனங்களை உணர்ந்தேன்.(ஒருவேளை இப்பொழுதுதான் இசையம்சங்களையெல்லாம் கவனிக்கிறேன் போலும்).

சமீபத்தில் பார்த்த "A Wednesday"(இப்படம் குறித்து தனியாக எழுத வேண்டும்) போன்ற ஹிந்தி படங்கள் இந்திய சினிமாவிற்கான உலக கதவை அகல திறந்திருக்கின்றன.தேவையில்லாத பாடல்கள்,ஜோடனைகளற்ற காட்சிகள்,புதிய கதைக்களங்கள் என இந்திய சினிமா தரமாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.இணை இயக்குனராக பணியாற்றியிருக்கும் "Loveleen Tandan " மீரா நாயர் போன்றவர்களிடம் பணியாற்றியவர்.Neeraj Pandey போன்ற திறமையான இய்க்குனர்கள் வரிசையில் அறியப்படுவார் என எதிர் பார்க்கலாம்.

தவறவிடக்கூடாத படம்.

Friday, January 9, 2009

சொற்களற்ற இரவுகளில்....

வெகு நேரமாய்
இணையை துரத்துகிறதொரு
சுவர்க்கோழி....

சலனமற்று தியானிக்கிறது
அறை மூலையில்
சிலந்தியொன்று....

வெற்று சுவரில்
புலப்படுகின்றன
நடனமாடும் ஓவியங்கள்....

மின் விசிறி அலைவுகளில்
நெளியும் திரைச்சீலையிடுக்கில்
நுரைக்கிறாள் நிலா....

சட்டென மின்சாரம் அறுந்துவிடும்
தருணங்களில்
எடையற்று மிதக்கின்றன
சொல்ல ஏதுமற்றவனின் சொற்கள்....

துல்லியமாய் கேட்கிறது
தெறிக்கும் ஹீக் சப்தம்....

Sunday, October 5, 2008

அசை...

பலி பீடத்தின் மீது படிந்திருந்த ரத்தக்கறைகள் துடைத்து அகற்றப்பட்டன.ஆரவாரங்கொண்ட வீதியதில் கைகளிரண்டும் பின்னே பிணைக்கப்பட்டவன் மருண்ட விழிகளூடே தள்ளாடி நடந்தான்.
நெட்டித் தள்ளும் தலைமை காவலாளியை கருணையின் சிறு துரும்பும் தீண்டாதவனாய் உணர்ந்தான்.வீதியெங்குமாய் நிறைந்திருந்த நிர்வாணிகள் அவனை மஞ்சள் மலர் தூவி வரவேற்றனர்.
அவனைச்சுற்றி தலையற்ற முண்டங்கள்/தலையற்ற மனித ரூபங்கள்.அவன் அக்கூட்டத்தில் தன் போல் தலையுள்ள ஒருவராவது உண்டா எனத் தேடினான்.பலி பீடம் மிளிர்ந்தது.அதனருகில் பளபளக்கும் ஒரு பட்டாக்கத்தியோடு ஒரு முண்டம் நின்றது.
குருதி வீச்சம் நிறைந்திருந்த அச்சூழலில் அடிவயிற்றிலிருந்து பீறிட்டு வந்தவற்றை வாந்தி எடுத்தான்.முண்டங்கள் சில ஓடி வந்து அவற்றை கைகளில் ஏந்திக் கொண்டன.அவன் பலி பீடத்தை பார்த்தான்.அதன் முன்பாக வெட்டப்பட்டிருந்த பெருங்குழியிலிருந்து தலையொன்று துள்ளி மீண்டும் குழிக்குள் விழுந்தது.கூட்டம் ஆரவாரித்தது.
கீறி விட்ட வாழையிலிருந்து நீர் வடிவது போல் அவன் கண்கள் ஒழுகின.எனினும் விசும்பல்கள் ஏதுமற்று அவன் முன்னேறினான்.

பலி பீடத்தில் தலைவைத்தபின் தன்னிச்சையாய் அவன் உதடுகள் முனுமுனுத்தவை ...


பாட்டி சொன்ன கதையில்
ஏழுமலை ஏழுகடல் தாண்டி
மலையுச்சியில்
ராட்சஷனின் உயிர் சுமந்த
கிளியின் மூக்கும் சிவப்பு தானே....?

***********************************

நீயும் நானுமான
நிகழ்தகவில் இனி
ஈவு மீதி எதுமில்லை....

***********************

உனது வட்டத்தின்
மையம்,பரிதி,ஆரம்
நானென்றாய்.
இனியேனும் உனது
மையமாக நீயே இரு...

***********************

என் அன்பே...
இனி நீயேனும்
தேனீரின் இறுதி மிடறு வரை
சுவைத்து அருந்து,

எல்லா முத்ததிலும்
அழுத்தம் கொடு
வேரறுந்து விழுதலே நலம்
வெட்டப்படுதல் வலி.

Sunday, August 17, 2008

மழலை விளையாட்டு...

அழுத அக்குழந்தையிடம்
கிலுகிலுப்பை ஒன்றை
கொடுத்தேன்
அது சிரிக்க தொடங்கிய போது
வெடுக்கென பிடுங்கிக் கொண்டேன்
மீண்டும் அழுத அக்குழந்தை
கிலுகிலுப்பையை தூர எறிந்து விட்டு
என்னை எடுத்துக் கொண்டது....

புதுப்பட்டிணம் கலவரம் - ஒரு ரிப்போர்ட்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கிடைத்த 3 நாள் விடுப்பில் என் ஊரான மயிலாடுதுறை சென்று விட்டு இன்று சென்னை திரும்பி கொண்டிருந்தேன்.புதுச்சேரி - சென்னை ECR பேரூந்து புதுப்பட்டிணம் என்ற ஊரை நெருங்கிக் கொண்டிருந்த பொழுது மதியம் மணி 3.00.

வழியெங்கும் டாடா சுமோக்களிலும்,கார்களிலுமாக நிறைய விடுதலை சிறுத்தை அமைப்பினர் கோஷமிட்ட படி சென்று கொண்டிருந்தனர்.இன்று ஏதோ பொதுக்கூட்டம் போலும்.புதுப்பட்டிணம் பகுதியை நெருங்கிய பொழுது பேரூந்துகள் கார்கள் ஓரங்கட்டப்பட்டன.விசாரித்ததில் பொதுக்கூட்டம் செனற குழுவினரில் சிலர் புதுப்பட்டிணம் கடையொன்றில் உணவருந்தி விட்டு பணம் தராததால் வந்த சிறிய சண்டை பெரிய அளவில் பிரச்சினையாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினர்.சற்று நேரத்திற்கெல்லாம் உருட்டுக் கட்டைகளுடன் ஒரு கும்பல் எங்கள் பேரூந்தை சூழ்ந்து கொண்டு சராமரியாக தாக்கியது.
நான் அமர்ந்திருந்த சன்னலோரம் ஒருவன் கருவேலஞ்சிம்பை எடுத்து வந்து தாக்கினான்.அனைவரும் கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.பேரூந்தில் இருந்தவர்கள் ஷட்டர்களை இழுத்து மூடிக்கொண்டனர்.ஓட்டுனர் செய்வதறியாது முன்னும் பின்னுமாக நகர்த்தி ஒரு சுவரோரம் கொண்டு பேரூந்தை நிறுத்திவிட்டார்.

மேலும் வெறி கொண்ட அந்த கும்பல் பின்னால் வந்த கார்களை நிறுத்தி மிக மூர்க்கமாக தாக்கினர்.எடுத்த எடுப்பில் கண்ணாடியை உடைத்தனர்.அவர்களிலேயே சிலர் தாக்கியவர்களை தடுத்து கொண்டிருந்தனர்.சில நொடிகளுக்காகவே புதுப்பட்டிண கிராம மக்கள் அவர்களை துரத்தி வந்தனர்.அவர்களை கண்டு கட்சியினர் தத்தமது வாகனங்களை நிறுத்தி விட்டு ஓடினர்.கிராமத்தினர் அவர்கள் வாகனங்களை உடைத்து நொறுக்கினர்.மேலும் கட்சி காரர் ஒருவருக்கு அறுவாள் வெட்டு விழுந்தது.கிட்டத்தட்ட சினிமா போல கண்ணெதிரே நிகழ்ந்து கொண்டிருந்த இச்சம்வங்களை பேரூந்தில் நின்று கொண்டு கண்ணாடி வழியே செய்வதறியாது பார்த்துக் கொண்டிருந்தோம்.

புதுப்பட்டிணம் கிராமத்தினர் பேரூந்துகளையோ கார்களையோ பொதுமக்களையோ எவ்வித தொந்தரவும் செய்யவில்லை.கட்சியினர் தூரத்தில் ஓடிச்சென்று நின்று கொள்வதும்வருகின்றவர்களை கண்ணில் படுகின்றவர்களை தாக்குவதுமாக இருந்தனர்.பெரும்பாலோனோர் சண்டைகளில் ஈடுபட்ட விதம் தமிழ் சினிமா எப்படி கற்று கொடுத்திருக்கிறதோ அதை வெளிக்காட்டுவதாக இருந்தது.நான் வந்த பேரூந்து அப்பகுதியை விட்டு கல்பாக்கம் செல்லும் வழியாக உள்ளே சுற்றி வெளியே வர ஒரு மணி நேரமானது.அதுவரையிலும் அப்பகுதியில் பெரிய போலீஸ் படை எதுவும் வரவில்லை.மேலும் வழியெங்கும் புதுவை செல்லும் பேரூந்துகள் நிறுத்தப்பட்டிருந்தன.தாக்குதலுக்குள்ளான கார்கள் ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன.

இன்று போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்.பாண்டிசேரியிலிருந்து விடுமுறை முடிந்து செனை கிளம்பும் எத்தனையோ பேர் அவதியுறுவர்.நான் இதை இங்கே எழுதியதன் நோக்கம் ஒரு குறிப்பிட்ட கட்சியை விமர்சிப்பதல்ல.உடைக்கப்பட்ட ஒரு காருக்குள் கைக்குழந்தையை சுமந்தபடி ஒரு நடுத்தர மனிதர் அமர்ந்திருந்தார்.அக்காட்சி மிகுந்த மன உளைச்சலை தந்து விட்டது.

அரசியலின் பெயரால் இங்கே நடந்து கொண்டிருக்கும் கலாட்டக்களில் ஒரு தனிமனிதனின் பத்திரமின்மையை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.அறைக்கு வந்த பிறகு சுதந்திர தினம் என ஒருமுறை சொல்லிப்பார்த்து கொண்டேன்.

மீனாய் சமைந்தவன்...

துயிலொரு பெருங்கனவான
பின்னிரவில் பற்றியெரியுமென்
குகையறைச் சுவரில் வழியும்
குமிழிரவை விழி பொருத்தி
நிலங்குளிர மழையருள
பிரார்த்தித்தேனவளை...

தடாகம் விட்டெழுந்தாள்
தவங்கலைந்த பெருந்தேவி
நதி சூழ்ந்த என் வீதி வழி
பவனி வந்தாள் யாழதிர
தன் கமல ஓடத்திலமர்ந்து...

தழலிருகும் குருதியின்
நினவாடை நுகர்ந்து
விரகம் கொடிதென முனுமுனுத்தாள்...

பெய்யென்றாள்
பெய்தமழை குகையறையுள்
குளம் வளர்த்தாள்
நீர்வெளிக்குள் மூழ்கியவள்
முகமுரசி அகங்கெடுத்தாள்...

இருளாய் இருக்கிறதென்றேன்
இருவிழியில் அகல் சுடர்ந்தாள்...

கரமொன்றை நீட்டியவள்
வாவென்றாள் வசமிழந்தேன்...

வரமென்ன வேண்டுமென்றாள்
ஒளியுதட்டில் முத்தமென்றேன்...

இதழ்கடையில் சினந்துடிக்க
பெருந்தேவி நானென்றாள்
இருந்துவிட்டுப் போயென்றேன்...

முடிவாய் சொல்லென்றாள்
முத்தம் முத்தமென்றேன்...
மீனாய் கடவ என சபித்து மறைந்துவிட்டாள்...