Friday, January 30, 2009

வில்லுப்பாட்டு...

சில நாட்களுக்கு முன்பு அலுவலகத்தில் நண்பனொருவன் திடீரென "வில்லு" இருக்கா என்றான்.நான் திருதிருவென விழித்து "அதெல்லாம் இல்லீங்க" என்றேன்.அவன் மேலும் விளக்கும் விதமாக "வில்லு-பாட்டுங்க"என்றான்.அப்பொழுதும் நம்ம டியூப் லைட் முனுக் முனுக் என மின்னி அணைந்துவிட்டதால் மறுபடியும் "இல்லீங்க, santhoor இருக்கு,"Music of the mountain" ஷிவ் குமார் ஷர்மா..என்றேன்.அவன் என்னைப்போலவே திருதிருவென விழித்துவிட்டு போய்விட்டான்.

யோசித்தால் ஆச்சர்யமாகத் தான் இருக்கிறது.கல்லூரி நாட்களில் வாரம் தவறாமல் குமுதம்,ஆனந்தவிகடன் வாங்கியவனா நான்.அப்பொழுது சினிமா இயக்குனர் கனவில்(நல்ல வேளை தமிழ் சினிமா பிழைத்தது என நீங்கள் முனகுவது கேட்கிறது) வேறு இருந்ததால்,சினிமா குறித்த செய்திகள் விரல் நுனியில் இருக்கும்.புதிய படப்பாடல்களை உடனுக்குடன் வாங்கி விடுவேன்.
இவையெல்லாம் தியானேஷ் எனும் நண்பர் சிற்றிதழ்களை அறிமுகம் செய்யும் வரைதான்.கல்லூரி இதழில் வெளியான என் கவிதையை படித்து தேடி வந்து நட்பு பாராட்டிய சக கல்லூரி மாணவர்.உயிர்மை முதல் பிரதியை வாசிக்கத்தந்து எப்படி இருக்கிறது எனக் கேட்டார்.நான் "தமிழில் தான் இருக்கு,ஆனா ஓரெழவும் புரியலீங்க"என்றேன்.ரமேஷ்-பிரேம்,சாரு நிவேதிதா வெல்லாம் படித்து வெலவெலத்து கிடந்தவனைப் பார்த்து பரிதாபப்பட்டு "எட்டுத்திக்கும் மதயானை,ஜே.ஜே.சில குறிப்புகள் போன்றவற்றை தந்து நமக்கு எலக்கிய அறிவு புகட்டுவதில் பெரிய சிரத்தை எடுத்துக்கொண்டார்.

என் நண்பர் அப்பொழுதே பக்குவப்பட்டவராக இருந்திருக்கிறார் என இப்பொழுது புரிகிறது.ஏனெனில் அவருக்கு சாரு,ஜெமோ,சுரா மூவரையும் ஒருங்கே பிடித்திருந்தது.கடைசியாக தொலை பேசிய போது கொற்றவை எப்படி என்றேன்.வாசிக்கலே என்றார்.நான் ஆச்சர்யமாக ஏன் என்றேன்.இவ்வளவு நாள் வெளியே தான் பேசினார்,இப்போல்லாம் உள்ளேயும் பேச ஆரம்பிச்சுட்டார் என்றார்.இந்த மாதிரி விஷயத்தில் நம்ம டியூப் லைட் பக்கென்று பிடித்து கொள்வதால் பிறகெதுவும் கேட்கவில்லை.

வில்லுவை மறந்து விட்டோம்.சினிமா பாடல்கள் தவிர்த்து இளையராஜாவின் "How to name it,Nothing but wind,மற்றும் Back street boys போன்ற ஆல்பங்களையே கேட்டிருந்த எனக்கு 2004 ஆம் ஆண்டு திருச்சியில்(இங்கே தான் பொறியியல் படித்தேன்) நிகழ்ந்த சத்குரு ஜகி வாசுதேவ் அவர்களின் சத்சங்கம் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.அதற்கு முன் ஓஷோவை தவிர்த்து வேறு எந்த ஆன்மீக ஆளுமைகளுடனும் பெரிய ஈர்ப்பு இருந்ததில்லை.

ஒஷோவை வாசிக்க நேர்ந்ததே ஆச்சர்யம் தான்.ஏதோ புத்தகம் வாங்க சென்று,அட்டைப்படத்திலிருந்த ஒஷோவைப் பார்த்து வசீகரமாய் இருக்கிறாரே என (பள்ளி இறுதி அல்லது கல்லூரி முதல் ஆண்டு) வாங்கிய முதல் புத்தகம் "வெற்றுப்படகு".அதற்கு முன் ஒஷோவையும் தெரியாது.
விடுதி நண்பரொருவர் அழைக்கவே ஜகியின் அந்த சத்சங்கத்திற்கு சென்றோம்.வழியெல்லாம் சாரை சாரையாக மக்கள் கூட்டம் வேறு.ஏதோ திருவிழா என நினைத்தபடி சென்ற எனக்கு ஆச்சர்யம்.எல்லோரும் வந்தது அந்த சத்சங்கத்திற்குத்தான்.ஜகி முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்."எத்தனை பேருக்கு ஆங்கிலத்தில் பேசுவது பரவாயில்லை" என்ற கேள்விக்கு பெரும்பாலோனர் அமைதி காக்கவே சிரித்தபடி தமிழில் பேசத்தொடங்கினார்.

சத்சங்கம் முடிவுறும் சமயத்தில் சிறிது நேரம் கூட்டு தியானம் என்றார்.கண் மூடி சிறிது நேரம் அமர்ந்திருந்தோம்.சில நிமிடங்களுக்கெல்லாம் அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தில் ஒரு சிறிய சலனம் கூட அற்று அமைதியான ஒரு சூழல் உருவாகியிருந்தது.திடுமென ஒலிக்கத்தொடங்கின மேடையிலிருந்த பெரிய பெரிய தோல் வாத்தியக் கருவிகள்.இசை வெள்ளம் என்ற சொற்றொடருக்கெல்லாம் அர்த்தம் அறிந்தது அன்று தான்.(தியான அனுபவங்களை வெளியே பீற்றிக் கொள்ளக்கூடாது என ஒரு விதி இருக்கிறது,எனினும் ஒன்றே ஒன்று) அந்த இசையின் அதிர்வுகளும்,தியான நிலையும் சேர்ந்து நான் அமர்ந்திருந்த இருக்கையிலிருந்து சட்டென மேலெழும்பி பறப்பதாக நிச்சயமாக உணர்ந்தேன்.(உடலின் பறக்கும் நிலை,அதன் கூறுகள்,Spiritual body,Cosmic body என விலாவாரியாக ஒஷோவின் ஒரு ஆன்மிக ரகசியம் என்ற நூலில் கூறப்பட்டுள்ளது.)

அந்த சத்சங்கம் முடிந்து வெளியே வந்த பொழுது நான் என் விடுதி நண்பரை பிராண்டி, "சார்,உங்களுக்கு தியானம் பண்ணும் போது பறக்குற மாதிரி ஏதாவது..." என இழுத்தேன்.அவர் என்னை ஒரு மாதிரியாக பார்க்கவே அத்துடன் விட்டு விட்டேன்.

பிறகு வேலை நிமித்தம் விழுப்புரத்தில் ஒரு நான்கு மாதம் தங்க நேர்ந்த சமயத்தில் ஏதேச்சையாக அங்கு நிகழ்ந்த ISHA யோக வகுப்பில் கலந்து கொண்டேன்.அதன் பிறகு எல்லாம் மாறிவிட்டது.வாசிப்பது,எழுதுவது என யாவும் பெரிய பிடிப்பொன்றும் அற்று நின்று போனது.2007 மற்றும் 2008 மிகவும் சோதனையான ஆண்டாக இருந்தது.மஹாராஷ்டிரா,ஒரிஸா என மூன்று வருடங்கள் சுற்றி பிறகு பிடிக்காமல் வேலையை விட்டு விட்டு ஆறுமாதங்கள் வீட்டிலிருந்தேன்.பொழுது போகாமல் இணையத்தில் மேய்ந்த பொழுது blog சமாச்சாரங்கள் கண்ணில் பட்டது.ஒஷோ என கூகிளியதில் கண்ணில் பட்டது அய்யனாரின் வலைதளம்.இவ்வாறாக ஓஷோ நம்மை தொடர்ந்து புதிய அனுபவங்களுக்கு எடுத்துச்செல்கிறார்.2008 மார்ச்சில் சென்னையில் வேலையில் மீண்டும் சேர்ந்து ஒரு வருடம் ஆகப் போகிறது.

2009 ல் புதிதாக யாவற்றையும் தொடங்குவோம் என செய்த முதல் காரியம் புத்தக சந்தை சென்றதுதான்.இடையில் நிறைய உலக படங்கள் பார்த்திருக்கிறேன்.கைவசம் நிறைய புத்தகங்களும்,எக்கச்சக்கமாக படங்களும் இருக்கின்றன.யார் என்ன எனத் தெரியாமலேயே உரிமையோடு நட்பு பாராட்டும் அனுஜன்யா,கார்த்திக்,உமா,தமிழன் இன்னும் புதிய நண்பர்கள் இவர்கள் எல்லோரையும் சந்திக்கும் பாலமாக அய்யனார் என அலாதியாக இருக்கிறது இந்த அனுபவம்.நன்றி அய்யனார்...

கடைசி வரை வில்லுவைப் பற்றி பேசாமல் விட்டாயிற்று.தொலைக்காட்சியோ,பேரூந்து பயணங்களோ இல்லாத office to room,Room to office என்ற சென்னை வாழ்வில் எங்கே சென்று "வில்லு" பாட்டெல்லாம் கேட்க.கையிருப்பெல்லாம் தனியறையும்,மடிகணிணியும்,இணையமும் தான்.சாருவின் கலகம்,காதல்,இசை படித்து, இணையத்தில் Nancy Ajram பாடல்களை தரவிறக்கினேன்.அதையும் இன்னும் கேட்க கூடவில்லை.ஏன் இதையெல்லாம் எழுதுகிறேன் எனத் தெரியவில்லை.குறைந்தது என்னையாவது திரும்ப பார்த்துக் கொள்ள முடிகிறது.
**முதல் மொக்கை என்பதால் ஆட்டோவெல்லாம் அனுப்ப மாட்டீர்கள் என நம்புகிறேன் : )

12 comments:

KARTHIK said...

// 2009 ல் புதிதாக யாவற்றையும் தொடங்குவோம் என செய்த முதல் காரியம் புத்தக சந்தை சென்றதுதான்.//

நல்ல சிறப்பான தொடக்கமாக அமையட்டும்.

// இன்னும் புதிய நண்பர்கள் இவர்கள் எல்லோரையும் சந்திக்கும் பாலமாக அய்யனார் என அலாதியாக இருக்கிறது இந்த அனுபவம்.நன்றி அய்யனார்...//

நிச்சயமாக அவர் ஒரு பாலம்தான்.உங்களைப்போல நண்பர்களை அமைத்துக்கொடுத்த அய்யனாருக்கு நானும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் நன்றி அய்ஸ் :-))

// **முதல் மொக்கை என்பதால் ஆட்டோவெல்லாம் அனுப்ப மாட்டீர்கள் என நம்புகிறேன் : ) //

அட மொக்கை கூட இலக்கியம் தாங்க.ஆட்டா அவந்தாலும் உங்ககிட்ட ஆட்டாகிராப் வாங்கத்தான் வரும்பாருங்க :-)).

How to name it,Nothing but wind நன்றி திரு.PKP

SPIDEY said...

is it possible for you to post ldownloading inks for those santhoor instrumental songs

ரௌத்ரன் said...

நன்றி கார்த்திக் :)

thx 4 visit spidey...shiv kumar albums and many gud music albums r available in torrents...jus try this..
http://btjunkie.org/search?q=shiv+kumar+sharma

I got it from spenser landmark.

அன்புடன் அருணா said...

சொந்தக் கதை சோகக் கதை நல்லாவே இருந்தது.....அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கோங்கப்பா....
அன்புடன் அருணா

காரூரன் said...

நல்ல மொக்கை எனது இந்திய நாட்களை அசை போட வைத்தது.

ரௌத்ரன் said...

வருகைக்கு நன்றி அருணா...

வருகைக்கு நன்றி காரூரன்...

ராஜ நடராஜன் said...

எழுத்து நடை சரளம்.

anujanya said...

ரௌத்ரன்,

வித்தியாசமான பதிவு. ரொம்ப நல்லா எழுதுறீங்க. என்னால் சரியாக சொல்ல இயலாத ஒரு தனித்திறமை உங்க கிட்ட இருக்கு. உங்க கவிதைகள், சில அபூர்வ ராகங்கள் மாதிரி வித்தியாசமாக, வசீகரமாக அதே சமயம் தனித்தன்மையுடன் இருக்கும்.

இது மொக்கை என்றால், அவ்வப்போது மொக்கையும் எழுதுங்கள்.

அய்ஸ் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம். இன்னமும் நம்ம பதிவுலகம் அவரது வீச்சைப் புரிந்து, அனுபவிக்காமல் இருப்பது கொஞ்சம் வருத்தமும், பெரிதும் மகிழ்ச்சியாகவும் இருக்கு. நமக்கு ஒரு elitist feeling தருது.

எனக்கு என்னமோ நீங்க சினிமாவுல சேர்ந்துடுவீங்கன்னு தோணுது. சும்மா பட்சி சொல்லுது. என்ன, திட்டிட்ட மாதிரி இருக்கா? All in the game :)

நிறைய எழுதுங்க.

அனுஜன்யா

ரௌத்ரன் said...

வருகைக்கு நன்றி திரு.ராஜ நடராஜன்...

@அனுஜன்யா...

விரிவான பகிர்விற்கு நன்றி அனுஜன்யா...

//அய்ஸ் பற்றி எழுதிக்கொண்டே இருக்கலாம். இன்னமும் நம்ம பதிவுலகம் அவரது வீச்சைப் புரிந்து, அனுபவிக்காமல் இருப்பது கொஞ்சம் வருத்தமும், பெரிதும் மகிழ்ச்சியாகவும் இருக்கு. நமக்கு ஒரு elitist feeling தருது. //

அவர் சரியான இடங்களுக்கு சரியாக போய் சேர்கிறார் என்றே நினைக்கிறேன். :))

//எனக்கு என்னமோ நீங்க சினிமாவுல சேர்ந்துடுவீங்கன்னு தோணுது. சும்மா பட்சி சொல்லுது.//

அப்படியே எப்பொழுது என்றும் கேட்டுப்பாருங்கள். :))

ARIVUMANI, LISBON said...

KADASIVARAI 'VILLU' PATHI SOLLEVEE ILLEYE...

Unknown said...

//யார் என்ன எனத் தெரியாமலேயே உரிமையோடு நட்பு பாராட்டும் அனுஜன்யா,கார்த்திக்,உமா,தமிழன் //
நன்றி ரெளத்திரன்...உங்களின் உள்ளார்ந்த தேடல்கள்தான் நீங்கள் கண்டடைந்த புத்தகங்கள், மனிதர்கள்.... நான் ஜேகேயில் தொடங்கி, ராமக்ருஷ்ணர், விவேகாநந்தர், என ஒரு ரவுண்ட் வந்து இறுதியில் ஓஷோவில் லயித்து கடைசியில் எனக்கு புரிந்த அல்லது புரியாமல் போய்விட்ட ஒரு புள்ளியில் நிறுத்திக்கொண்டே. புத்தர் பற்றிய விதயங்கள், பெளத்தம் சிறுவயது முதல் பிடிக்கும். சத்குரு ஓஷோ மற்றும் புத்தரின் கருத்துக்களை அழகாகவும் ஆழமாகவும் பிரமிக்கத்தக்க வகையில் புரியும்படியாகவும் சொல்வதால் சில காலம் ஈஷாவில் இருந்தேன் (நானும் Isha Meditator தான் ரெளத்ரன்.)...உங்கள் கவிதைகளையும் வாசித்தேன். மிகவும் பிடித்தது. தொடர்ந்து எழுதுங்கள்...வாழ்த்துக்கள் (நான் Slumdog Millionaire பார்த்தேன், பதிவு போடவில்லை...நீங்க பாத்தாச்சா?)

ரௌத்ரன் said...

வருகைக்கு நன்றி அறிவுமணி...


//(நானும் Isha Meditator தான் ரெளத்ரன்.)//

:)

நன்றி உமாஷக்தி...